Search This Blog

Thursday, September 25, 2014

Rawa Urundai

#ரவாஉருண்டை : ரவா உருண்டை மாவு உருண்டைகளில் மிக மிக ருசியானது. பாரம்பரியமாக தீபாவளியின் போது செய்யக்கூடிய இனிப்புகளில் ஒன்றாகும். புதியதாக உருக்கிய நெய் கொண்டு செய்தால்  சுவையும்  மணமும் அருமையாக இருக்கும்.
இனி எவ்வாறு செய்வது என காணலாம்.

ரவா உருண்டை


தேவையான பொருட்கள் :
1/2 கப்                                     ரவா
1/2 கப்                                     சர்க்கரை
1/4 கப்                                     நெய்
2 அ 3                                      ஏலக்காய்
5 அ 6                                       முந்திரி பருப்பு

செய்முறை :
அடுப்பில்  அடிக்கனமான பாத்திரத்தை வைத்து மிதமான தீயில் சூடாக்கவும்.
1/2 தேக்கரண்டி நெய் விட்டு முந்திரியை சிறு துண்டுகளாக்கி போட்டு சிவக்க வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.

பின்னர் அதே பாத்திரத்தில் நெய் விடாமல் வெறுமனே ரவாவை வாசனை வரும் வரை வறுக்கவும். சிவக்க விடக்கூடாது. ரவாவின் நிறம் மாறாமல் வெண்மையாகவே இருக்க வேண்டும்.

ரவாவின் மணம் வரும் வரை  நிறம் மாறாமல் வறுத்தெடுக்கவும்

சூடு ஆறிய பின்னர் மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
பொடித்ததை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
அடுத்து சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக தூளாக்கி பொடித்த ரவாவுடன் சேர்க்கவும்.
வறுத்து வைத்துள்ள முந்திரியையும் சேர்க்கவும்.
ஒரு நீட்ட கரண்டியால் நன்றாக கலந்து விடவும்.

பொடித்த ரவா மற்றும் சர்க்கரை கலவை

மற்றொரு  கனமான பாத்திரத்தில் நெய்யை  இலேசாக சூடாக்கி, கலந்து வைத்துள்ள ரவா சர்க்கரை கலவையுடன் கலக்கவும்.

ரவா சர்க்கரை கலவையுடன் சூடான நெய் சேர்த்து கலக்கவும்

கைகளால் பிசறி விட்டு உருண்டைகளாக அழுத்தி பிடித்து வைக்கவும்.
உருண்டை பிடிக்கும் போது உடைந்து விழுந்தால் இன்னும் சிறிது சூடான நெய் விட்டு உருண்டை பிடித்து வைக்கவும்.

ஒரு காற்றுப் புகா பாத்திரத்தில் எடுத்து வைத்து பத்திர படுத்தவும்.
ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை வைத்திருக்கலாம்.

ரவா உருண்டை

ஆனால் இதன் அலாதியான சுவை அவ்வளவு நாட்கள் வைத்திருக்க விடுமா என்ன?!! செய்யும் போதே அல்லது செய்த அன்றே காலி ஆகி விடும்.
ஒன்று எடுத்து சுவைத்தால் மற்றொன்று எடுத்து சாப்பிட கட்டாயமாக  தூண்டும்... இதன் சுவையும் மணமும் !!....
செய்துதான் பாருங்களேன்!!... அப்போதுதான் நான் சொல்வதின் உண்மை உங்களுக்கும் புரியும்.

4 comments:

  1. இதைப் பார்க்கும் போதே சாப்பிடத் தோன்றுகிறதே! முன்பெல்லாம் அடிக்கடி இதே முறையில் தான் செய்வேன். இரண்டு நாட்கள் கூடத் தாண்டாது . எவ்வளவு செய்தாலும் இரண்டே நாட்களில் டப்பா காலி. இப்பொழுது திருவாளர் டையாபிடிஸ் வந்து விட்டதால் இதல்லாம் அதிகம் செய்வதில்லை. ஆனாலும் நாளை செய்து கொஞ்சமாக சாப்பிட வேண்டியது தான்.

    ReplyDelete
    Replies
    1. நானும் வெகு நாட்கள் கழித்து என் மகள் விடுமுறையின் போது வீட்டிற்கு வந்த போது செய்தேன். செய்து முடித்த போது வீட்டிற்கு எங்களது நண்பர் ஒருவர் அப்போது வந்திருந்தார். அவருக்கு இரண்டு உருண்டைகளை தட்டில் வைத்து அளித்தேன். இரண்டையும் காலி செய்து விட்டு இன்னொன்றும் வேண்டும். ஆஹா!... மிக மிக அருமையான ருசி என கூறினார். தேநீர் கொடுத்த போது, நாக்கில் நிற்கும் சுவை மறைந்துவிடும் என்று தேநீரை பருக மறுத்து விட்டார். அனைவரையும் மெய் மறக்க செய்து விடும் இதன் சுவை ...!!...
      தாங்கள் கொஞ்சமாக செய்து சுவைக்கவும். பின்னர் தங்கள் மருத்துவர் என்னை கடிந்து கொள்வார்!!
      வருகைக்கு நன்றி!!

      Delete