Search This Blog

Friday, May 30, 2014

Avakkai Urugai

#ஆவக்காய்ஊறுகாய் : கோடை வெய்யிலுக்கு பயந்தாலும் நாவில் நீர் சுரக்க வைக்கும் மாங்காயை நினைக்கும் போது வெய்யில் காலமும் சுகமானதாகவே தோன்றும்.  மாங்காயை வெட்டி மிளகாய் தூள் அல்லது மிளகு தூள் உப்புடன் சாப்பிட்டால்...... ம் ... அதன் ருசியே தனிதான் !!

சிறு சிறு வடுமாங்காய் விற்க ஆரம்பித்தால் கோடையின் தொடக்கம் என அர்த்தம். அம்மாக்களும் பாட்டிகளும் ஊறுகாய் போட ஆயத்தம் ஆகி விடுவார்கள். முதலில் வடுமாங்காய், அடுத்து மாங்காய் தொக்கு, பிறகு ஆவக்காய் ஊறுகாய் என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
ஆவக்காய் ஊறுகாய் ஆந்திர மாநிலத்தின் பாரம்பரிய ஊறுகாய் ஆகும்.மாங்காய் துண்டுகளை கடுகு, வெந்தயம், மிளகாய் தூள் மற்றும் உப்பு கலந்த எண்ணெயில் ஊற விடுவதே ஆவக்காய் ஊறுகாய் ஆகும்.

எங்களுக்கு எண்ணையில் ஊறிய மாங்காயை சாப்பிட பிடிக்கும். ஆனால் எண்ணெய் கலவை வீணாகி போகும்.
அதனால் எனது தாயார் இதே  பொருட்களை கொண்டு ஆவக்காய் செய்வார்கள். ஆனால் செய்முறையில் சிறு மாற்றம் உண்டு.
மிகவும் புளிப்பில்லாத கொட்டையுடன் கூடிய மாங்காய் கொண்டு செய்யப்படுகிறது. நான் பெரும்பாலும் கிளி மூக்கு மாங்காய் என அழைக்கப்படும் பெங்களூராவை உபயோகப் படுத்தி செய்வது வழக்கம்.
எப்படி என்று இங்கு காணலாம்.

ஆவக்காய் ஊறுகாய் 

தேவையான பொருட்கள் :


1 kg [சுமார் 5 ]                           மாங்காய்
1/2 கப்                                         சிகப்பு மிளகாய் தூள்
1/2 கப்                                         நல்லெண்ணெய்
1/2 கப்                                         உப்பு
1/4 கப்                                         கடுகு
1/8 கப்                                         வெந்தயம்
2 Tsp                                            மஞ்சத்தூள்

செய்முறை :
நாள் 1 :
காயை நன்கு கழுவி வைக்கவும்.
மிகவும் கஷ்டமான வேலை எது என்றால் உள்ளே உள்ள கொட்டை ஓட்டோடு வெட்டுவதுதான்.
முதலில் நீளவாக்கில் இரண்டாக வெட்டவும்.
நடுவில் உள்ள பருப்பை நீக்கி விடவும்.
பிறகு ஒரு அங்குல துண்டுகளாக வெட்டி  அகலமான தட்டில் பரப்பவும்.
வெய்யிலில் 4 முதல் 5 மணி நேரம் காய வைக்கவும்.
சிறிது சுருங்கினாற்போல காய்ந்தால் போதும்.

வீட்டின் உள்ளே அதே தட்டிலேயே வைத்து ஒரு மெல்லிதான துணி கொண்டு மூடி வைக்கவும்.

மாலையில் முதலில் எண்ணெயை அடுப்பில் இலேசாக புகை வரும் வரை சூடு பண்ணி பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
நன்றாக ஆற விடவும்.

கடுகை சிறிது நற நறவென பொடித்துக் கொள்ளவும்.
அதேபோல வெந்தயத்தையும் பொடித்து தனியே வைக்கவும்.
உணவு பத்திரப்படுத்த தகுதி உள்ள மூடியுடன் கூடிய சுத்தமான பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக் கொள்ளவும். ஈரப்பசை சிறிதும் இருக்கக்கூடாது.

பொடித்த பொருட்கள், உப்பு, மிளகாய் தூள் ஆகிய அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் எடுத்து ஒன்றாக கலக்கி வைக்கவும்.
பிளாஸ்டிக் டப்பாவில் கலந்த பொடிகள் மற்றும் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
கலக்க உபயோகிக்கும் கரண்டி சுத்தமானதாகவும் ஈரம் இல்லாததாகவும் இருப்பது மிக மிக அவசியம்.
சிறிது சிறிதாக மாங்காய் துண்டுகளை சேர்த்து ஒரு நீண்ட கரண்டியால் கலவையுடன் கலக்கி விடவும்.

எல்லாவற்றையும் நன்றாக கலக்கிய பின்னர் மூடி வைத்து விடவும்.

நாள் 2 :


மறுநாள் பார்த்தால் சிறிது தளர இருப்பதை காணலாம். மாங்காயில் உள்ள தண்ணீர் உப்புடன் சேர்ந்து சிறிது இளக்கம் கொடுத்திருக்கும். நன்றாக குலுக்கி வைக்கவும். சரியாக குலுக்கினாலும் மேலே உள்ள மாங்காய் கீழே போகவில்லை என்றால் டப்பாவை திறந்து ஈரமில்லாத கரண்டியினால் கலக்கி விடலாம். மறுபடியும் மூடி வைத்து விடவும்.

நாள் 3 :
இன்றும் குலுக்கி வைக்கவும்.
நேற்றை விட இன்று இன்னும் சிறிது அதிகமாக நீர்த்து போய் கீழே எண்ணெய் கலவையாக இருப்பதை காணலாம்.


நாள் 4 :
ஒரு சுத்தமான ஈரமே இல்லாத ஒரு தட்டை எடுத்துக் கொள்ளவும்.
மாங்காயை ஒரு சுத்தமான ஈரமில்லாத கரண்டியால் எடுத்து தட்டின் மேல் பரப்பவும்.

கீழே தங்கியுள்ள எண்ணெயை முடிந்தவரை தட்டில் கொட்டாமல் பார்த்துக் கொள்ளவும். அந்த எண்ணெயை ஒரு சிறிய கிண்ணத்தில் வடித்து வேறு சமையலில் பயன் படுத்திக் கொள்ளலாம்.

நல்ல வெய்யிலில் நாள் முழுவதும் காய விடவும்.
இடையே கரண்டியால் பிரட்டி விடவும்.

நாள் 5 :


இன்றும் வெய்யிலில் எடுத்து வைத்து காய வைக்கவும்.
இரண்டு அல்லது மூன்று நாட்கள் காய வைக்கவும்.

பொதுவாக பகல் வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸ் க்கு மேலே இருப்பின் இரண்டு நாட்கள் காய வைத்தால் போதும்.
அதற்கு குறைவாக இருப்பின் 3 அல்லது நான்கு நாட்கள் காய வைக்கவும்.
மிகவும் சுக்காக காய வைக்கக்கூடாது.
சிறிது ஈரப் பசை இருக்க வேண்டும்.
சுக்காக காய்ந்து விட்டால் கடிப்பதோ அல்லது பிய்த்து சாப்பிடுவதோ கடினமாக இருக்கும்.

காய்ந்த ஆவக்காயை ஒரு சுத்தமான ஈரமில்லாத கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும்.


உடனே சாப்பிட நன்றாக இருக்காது.
20 நாட்கள் முதல் 1 மாதம் வரை ஊறிய பிறகே சாப்பிட பயன் படுத்தலாம்.

சுத்தமாக தண்ணீர் மற்றும் கை படாமல் செய்த ஆவக்காய் ஊறுகாய் இரண்டு வருடங்களுக்கு கூட ... அதற்கு மேலும் கூட உபயோகிக்கலாம்.
அருமையாக இருக்கும். வெந்தயமும் கடுகும் சேர்த்திருப்பதால் உடலுக்கும் நல்லது.
தயிர் சாதத்துடன் சாப்பிட ஏதுவான அருமையான ஊறுகாய் ஆகும்.
பருப்பு சாதம் மற்றும் பருப்பு பொடி சாதத்துடனும் நன்றாக இருக்கும்.
சப்பாத்தி மற்றும் பூரியுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட ருசியாக இருக்கும்.





சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் ஊறுகாய்
தேன் நெல்லிக்காய்
நெல்லிக்காய் தேனில் ஊறியது
உப்பு எலுமிச்சங்காய்
உப்பு எலுமிச்சங்காய்



No comments:

Post a Comment